கச்சத்தீவை மீட்க நடவடிக்கை!
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
'தேசிய ஜனநாயக கூட்டணியான அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. எனவே, இராமநாதபுரத்தில் அதிமுக ஆதரவுடன் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவார்.
அ.தி.மு.க. - பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலம்தொட்டு ஒருமித்த கருத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.
அரசியலில் புனித தன்மை இல்லாத திமுகவினரால் வெற்றி பெற இயலாது. தனிப்பட்ட ஒரு குடும்பத்துக்காகவே திமுக செயற்படுகிறது. இதை மக்களும் நன்கறிவார்கள்.
கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம். கொரோனாவால் நாம் தற்போது மோசமாக பாதிக்கப்படவில்லை.
இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்விடயத்தில் தமிழகத்திற்கு சாதகமான நிலையே ஏற்படும். இலங்கை அரசுடன் நமது வெளியுறவுத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆழ்கடல் மீன்பிடி திட்டமும், தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது' என்றார்.
கருத்துகள் இல்லை