புத்தர் சிலை உடைப்பு விவகாரம்!


குளியாப்பிட்டி, ரத்மலவத்தையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய இந்திய பிரஜையை , எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, குளியாப்பிட்டி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்தியாவின் கேரளாவின் பரக்கலில் வசிக்கும் புன்னி கஞ்சரிஷ்ணன் நாயர் திலிப்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டி, ரத்மலவத்தையில் பெண்ணொருவரை திருமணம் செய்து, தற்காலிக விசாவில் சுமார் 16 ஆண்டுகளாக இலங்கையில் அவர் வசித்து வந்தார்.

சம்பவதினத்திலன்று, குறித்த நபர் சட்டவிரோதமாக விகாரைக்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அந்த நபர் அடிக்கடி குடிபோதையில் இருந்ததாகவும், அவரது மனைவியுடன் சண்டையிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நான்கு தலைகள் கொண்ட சிரச புத்தர் சிலை உடைக்கப்பட்டதன் காரணத்தை கண்டுபிடிக்க வேண்டுமென்பதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு பொலிசார் கோரினர்.

சந்தேக நபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது வாடிக்கையாளர் குடிப்பழக்கமுடையவர் என்றும், தனது மனைவியின் துன்புறுத்தலை தாங்க முடியாமல் இரவில் விகாரையில் தங்குவதாகவும், கூறினார்.

எனினும், சந்தேக நபரின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதிவான் அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.