இராணுவத்தைக் காப்பாற்ற புதிய சட்டமூலம்!

 


சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் ஸ்ரீலங்கா முப்படையினருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் சட்டமொன்றை இயற்ற தயங்கப்போவது இல்லையென ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், இராணுவத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விசாரணைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர்,

அமெரிக்காவில் இரண்டு கட்டளைச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்க காங்கிரஸ் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இதற்கமைய அமெரிக்க படையினருக்கு எதிராக ஏதாவது சர்வதேச அமைப்பு அல்லது நாடு விசாரணைகைளை நடத்துமெனின் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அமெரிக்கா அரசாங்கம், நீதிமன்றங்கள் மற்றும் அமெரிக்க பிரஜைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க படைக்கு எதிரான விசாரணைக்கு எவரும் ஒத்துழைப்பு வழங்க முடியாது - அவ்வாறு வழங்கினால் அது பாரதூரமான குற்றமாகும்.

அதேபோல் பிரித்தானியாவிற்குள் அந்நாட்டு படையினருக்கு எதிராக ஏதாவது விசாரணைகளை மேற்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுமாயின் அது முற்றுமுழுதாக சட்டவிரோத செயல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கென ஒரு சட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகவே அந்தநாடுகள் அந்தந்த நாடுகளின் முப்படையினரை காப்பாற்ற இவ்வாறான தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

எனினும் இலங்கையில் 30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தை தொடர்ந்து தண்டிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனால் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைப் போல் எமது இராணுவத்தை பாதுகாக்க நாடாளுமன்றத்தின் ஊடாக சட்டத்தை உருவாக்குவதற்கு நாம் பின்னிற்கப்போவது இல்லை.

அரசாங்கம் என்ற வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு செயற்பட நாம் புதிய சட்டத்தை உருவாக்க தயங்கப்போவது இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.