சிங்கப்பூரிலிருந்து ஒட்சிசன் இறக்குமதி செய்ய தீர்மானம்!


இலங்கை வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலின்டர் பற்றாக்குறை கிடையாது என்றும், தேவையாயின் சிங்கப்பூரில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்குஅரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மாத்தறை பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வைரஸ் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலின்டர் பற்றாக்குறை காணப்படுவதாக போலியான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டில் இரண்டு பிரதான நிறுவனங்கள் மருத்துவ துறைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களை உற்பத்தி செய்கின்றன.

இந்நிலையில் தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி இவ்விரண்டு நிறுவனங்களிடமும் உற்பத்தி தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கையினை கோரினார்.

இவ்விரு நிறுவனங்களும் மருத்துவ துறைக்கு ஒரு நாளைக்கு தேவையான 22 ஆயிரம் லீட்டர் ஒட்சிசன் சிலிண்டர்களை சாதாரண தேவைக்கான உற்பத்தி செய்கின்றன. தற்போது அந்த உற்பத்தி 67 ஆயிரம் லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 15 ஆயிரம் லீற்றர் ஒட்சிசன் சிலின்டர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே மருத்துவ துறையில் ஒட்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படவில்லை. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன் தேவையாயின் சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை தேவையான அளவு மேலதிகமான இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் தொடர்பிலும் மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் மக்கள் அவசர சிகிச்சை கட்டில்கள் இல்லாத காரணத்தினால் உயிரிழக்கவில்லை.

ஒட்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அங்கு மரணங்கள் பெருமளவில் தற்போது பதிவாகியுள்ளன. இந்த நிலையில் இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டடுள்ள நெருக்கடி நிலையை வெற்றிக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இப்பிரச்சினையை நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தேசிய பிரச்சினையாக கருத வேண்டும். எனவே சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை அனைவரும் முழுமையாக பின்பற்றுவது அத்தியாவசிய கடமையாகவே கருதப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.