இயக்குநர் லிங்குசாமிக்குக் கிடைத்த அங்கீகாரம்!
தமிழ் சினிமாவில் மோசமான தோல்விப் படங்களில் நடிக்காத நடிகர்கள் அல்லது இயக்காத இயக்குநர்கள் இல்லை என்றே கூறலாம். ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களாக இயக்கிவந்த லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்த 'அஞ்சான்' தோல்வி அடைந்தது. இது, இயக்குநர் லிங்குசாமியைத் தொழில் ரீதியாகக் கடுமையாக பாதித்தது.
முன்னணி நாயகர்கள் இவரது இயக்கத்தில் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். சமீபத்தில்கூட 'ஜகமே தந்திரம்' படம் வெளிவந்தபோது ரஜினிகாந்துக்கு 'பாபா', விஜய்க்கு 'சுறா', சூர்யாவுக்கு 'அஞ்சான்' போல தனுஷுக்கு 'ஜகமே தந்திரம்' என ரைமிங்காக மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.
அஞ்சான் தோல்வியிலிருந்து மீண்டு 'சண்டக்கோழி 2' படத்தை லிங்குசாமி இயக்கியபோது ஒட்டுமொத்த திரையுலகமும் அப்படத்தின் வெற்றியை எதிர்பார்த்தனர். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் நீண்ட முயற்சிக்குப் பின் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.
நேற்று அந்தப் படத்தைப் பற்றிய தகவல் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் நடிகர் ராம். “கடைசி கட்ட கதை முடிந்தது. எப்படி... லிங்குசாமி சார் லவ் யூ, சூப்பர் டூப்பர் கிக்டு... நான் சொல்றேன் கேமராவை ரோல் பண்ணுங்க” என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.
-இராமானுஜம்
கருத்துகள் இல்லை