ஃபேமிலி மேன் 3-ல் விஜய் சேதுபதியின் ரோல்!

 


தமிழில் பெரிதாக வெப் சீரிஸ் கலாச்சாரம் உருவாகவில்லையென்றாலும், பிற மொழியில் உருவாகும் வெப் சீரிஸ்களுக்குத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு நிலவுகிறது. அப்படி, பிரைம் வீடியோவில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் தான் ‘ஃபேமிலி மேன்’.

‘ஃபேமிலி மேன்’ முதல் சீசனானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால், இரண்டாம் சீசனில் தென்னிந்திய முகத்தை தேர்ந்தெடுத்தால் ரீச் அதிகமாகும் என சமந்தாவைத் தேர்ந்தெடுத்தனர். அப்படி, ‘ஃபேமிலி மேன்’ சீசன் 2 கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது.

முதல் சீசனைப் போலவே, இரண்டாம் சீசனும் பெரிய வெற்றியைப் பெற்றாலும் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளைப் பெற்றது. தமிழக அமைச்சர்கள், கட்சித்தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அமைச்சருக்குப் படத்தைத் தடை செய்யக் கோரி மனு அளித்தனர். எல்லாவற்றையும் மீறி இரண்டாம் சீசன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் கதை இதுதான். உளவுத் துறை அதிகாரியாக இருக்கும் நாயகன் மனோஜ் பாஜ்பாய் & டீமின் வேலை என்னவென்றால், இந்தியாவில் குற்றங்கள் நடக்கும் முன்பே கண்டுபிடித்து அதை முறியடிப்பதுதான். குறிப்பாக, தீவிரவாதிகளால் ஏற்படும் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டுபிடித்து முறியடிப்பார்.

முதல் சீசனில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதியை முறியடிப்பது போல கதை உருவாக்கப்பட்டிருக்கும். இரண்டாம் சீசனில், தமிழீழப் போராளிகள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் கூட்டணி கொண்டு நாட்டின் பிரதமரைக் கொலை செய்ய திட்டமிடுவார்கள். அதை மனோஜ் பாஜ்பாய் & கோ எப்படி தடுத்தது என்பதே திரைக்கதை.

இரண்டாம் சீசன் முடியும்போதே, மூன்றாவது சீசனுக்கான கதையையும் ஓப்பன் செய்திருப்பார்கள். இதில், சீனாவிலிருந்து வரும் சதிகார வேலையைப் படம் பேசப் போகிறது.

மூன்றாவது சீசனில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. சமந்தா போலவே, இவரும் நெகட்டிவ் ரோலில்தான் நடிக்க இருக்கிறாராம். டெட்லி வில்லனாக விஜய் சேதுபதி இருப்பார் என்று சொல்கிறார்கள். இரண்டாம் சீசனிலேயே நடிக்க வேண்டியது மிஸ் ஆகிவிட்டதால், இந்த முறை கட்டாயம் நடிப்பார் என்கிறார்கள்.

விஜய் சேதுபதியை நடிக்க வைக்க அதிக ஆர்வம் காட்டுவது நடிகர் மனோஜ் பாஜ்பாய் தானாம். ஏனெனில், சமீபத்தில் நடிகர்களின் ரவுண்ட் டேபிள் மீட்டிங்குக்குப் பிறகு சேதுபதியுடன் நட்பு அதிகமாகியிருக்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றிவிட வேண்டுமென்ற ஆசையே, விஜய் சேதுபதியை விடாமல் துரத்துகிறது என்கிறார்கள்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க போய், ரசிகர்களின் எதிர்ப்பைப் பெற்ற அனுபவம் இருப்பதால், இரண்டாம் சீசனில் நடிக்கவில்லை. ஆனால், மூன்றாம் சீசனில் சீன பயங்கரவாதம் எனக் கதைப் போவதால் தயக்கமின்றி நடிக்க சம்மதம் கூறியிருக்கிறாராம் சேதுபதி.

-தீரன்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.