தமிழர்களுக்கு ஐ.நா. நீதி வழங்கியே தீரும் மாவை நம்பிக்கை

 


போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா. நீதி வழங்கியே தீரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டார்.

போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நாடாக இலங்கை இருக்கின்றபோதும் அதனைப்  பெரிதுபடுத்தாமல் அரசு இருக்கின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஐ.நா. மனித உரிமைகள் அமர்வு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வாய்மூல அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மார்ச் 03 ஆம் திகதி மீண்டும் நடைபெற்ற அமர்வில் இலங்கை பற்றியதான எழுத்து மூலமான அறிக்கையை அவர் சமர்ப்பித்த போதிலும், அதற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் பொறுப்பற்ற முறையில் இலங்கை அரசு நடந்தது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த அமர்வில் பங்கேற்ற உறுப்பு நாடுகளும் தங்களின் முன்னேற்றகரமான கருத்துக்களை தமது தரப்பிலிருந்து முன்வைத்தன.

இதன்படி இந்தியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் முன்னேற்றகரமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தன” – என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.