சம்பாதித்தது எல்லாம் போச்சு: பார்த்திபன்!

 


திரைப்பட விழாக்கள் சம்பந்தப்பட்ட படம் சம்பந்தமான தகவல்கள், செய்திகளை வெளியிடுவதன் மூலம் அந்தப் படம் பொதுவெளியில் பிரபலமாகும்.

வியாபாரம் நடக்கும் என்பதற்காகவே நடத்தப்படுகிறது தமிழ் சினிமாவில் நடைபெறும் இதுபோன்ற பெரும்பாலான விழாக்கள் நோக்கத்தைவிட்டு வெகுதூரம் விலகி படத்தின் இயக்குநர், தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி கூறும் நிகழ்வாகவே முடிந்து விடும். சில விழாக்கள் அறிவுபூர்வமாகவும், சர்ச்சைகளை உருவாக்ககூடிய விழாவாகவும் மாறிவிடும்.

அப்படி ஒரு விழாவாக சென்னை பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்ற 'அக்கா குருவி' படத்தின் இசை வெளியீட்டு விழா அமைந்தது. இளையராஜா கலந்துகொண்ட இந்த விழாவில் மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு பேசுவது வரலாற்று பிழை என பேசினார் இயக்குநர் அமீர். இந்தப் படம் ஓடவில்லை என்றால் மீண்டும் மிருகம் போன்ற வயது வந்தோருக்கான படங்களை இயக்க போய் விடுவேன் என்றார் இயக்குநர் சாமி.

அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர் பார்த்திபன் தனது கடந்தகால, நிகழ்கால அனுபவங்களை கூறி எல்லோரையும் நெகிழ வைத்தார்.

விழாவில் இயக்குநர் ரா.பார்த்திபன் பேசியபோது, 'இங்குள்ள அனைவரும் பேசியதும் வீண். நான் பேசப் போவதும் வீண்தான். இந்தப் படத்தை பார்த்து அதைப் பற்றி பேசிய குழந்தைகள்தான் உண்மையை பேசியவர்கள். பெரியவர்கள் அனைவருமே ஒருவர் பேசியதைவிடவும் மற்றொருவர் சிறப்பாக பேச வேண்டும் என்று நினைப்பார்கள். நான் உட்பட அப்படித்தான். சமீபத்தில்கூட ஒரு படத்தின் விமர்சனங்களின்போது பெரியவர்கள் அனைவரும் அழகாக பேசினார்கள். ஆனால், சிறுவன் ஒருவன் சொன்ன கேடித்தனமான கருத்துதான் வைரல் ஆனது. ஏனென்றால், அவன் சொன்னது மிகவும் யதார்த்தமாக இருந்தது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால், அது போன்ற குழந்தைகளின் விமர்சனம்தான் இந்தப் படத்திற்கான சரியான விமர்சனம்.

சமீபத்தில்கூட பேச்சாளர் பர்வீன் சுல்தானா அமீரை ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டார். அதில் அவர் கேட்ட ஒரு கேள்விக்கு அமீர் ஒரு சிரிப்பை மட்டுமே உதிர்த்தார். அந்த சிரிப்பு 1500 அர்த்தங்கள் அடங்கிய ஒரு பூங்கொத்து போல இருந்தது. நானும் அவரின் பேச்சிற்கு ரசிகன்தான். இன்றும் அழகாக பேசினார். நிறைய தேவையான விஷயங்களை கூறினார்.

நல்ல படங்களை இயக்குவதற்கு ஏன் யாரும் முன் வருவதில்லை என்பதை அழகாக இங்கே எடுத்துரைத்தார் அமீர்.

நான் உள்ளே வெளியே என்று ஒரு படத்தை இயக்கினேன். அதற்கு காரணம் நான் இயக்கிய ‘சுகமான சுமைகள்’ படம்தான். நான் அந்தப் படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்பதற்காக மிகவும் ஒழுக்கமாகத்தான் இயக்கினேன். ஆனால், அதை என் குடும்பம் மட்டுமே பார்த்தது.அந்தப் படத்தால் நான் 75 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தேன். அது நான் அதுவரையிலும் சம்பாதித்து வைத்திருந்த பணம் மட்டுமில்லை. சம்பாதிக்கப் போகும் பணத்தையும் சேர்த்து போடப்பட்ட பணம். அந்த பொருளாதார பிரச்சனை, என் வாழ்க்கையிலேயே விளையாட ஆரம்பித்து விட்டது.

எனக்கு தெரிந்து ரஹ்மான் சார் சொல்வதுபோல் நம் முன்பாக இரண்டு பாதைகள்தான் உள்ளன. ஒன்று காதல், மற்றொன்று வெறுப்பு. அதில் நாம் தேர்தெடுக்க வேண்டியது காதலைத்தான்” என்பார். அது போல, தேர்ந்தெடுத்தலே மிக முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்.

அதில் இயக்குநர் சாமி அவர்கள் தேர்ந்தேடுத்தது ‘CHILDREN OF HEAVEN’. அதைவிட சிறந்த தேர்வு இசை ஞானிஇளையராஜா. ஒரு ஏழு நல்ல இதயங்கள், சாமி அவர்களை இயக்குநராக தேர்வு செய்துள்ளனனர். இதற்கான விளைவு, அமீர் சொன்னதுபோல் இந்தப் படத்தை எவ்வளவு குறையாக இயக்கியிருந்தாலும், அது குறையாக இருக்காது.

சாமி என்னுடன் பணிபுரிந்தவர் என்பது இந்த படத்தை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இதற்கு முன்னதாக இவர் இயக்கிய படங்களை பார்க்கும்பொழுது, பொறாமையாக இருக்கும். அவரும் இது போன்ற சர்ச்சையான படங்களை இயக்குகிறார் என்பதனால்.

இயக்குநர் ஹெச்.வினோத்தும் என்னுடன் உதவி இயக்குநராக சில காலங்கள் பணியாற்றியுள்ளார். அவர் ‘அஜித் அஜித்’ என்று போகும் சமயத்தில், சாமி மஜித் மஜித் என்று போயிருக்கிறார்.

அவரின் சோர்விற்கு காரணம் அவர் இயக்குநராக மட்டுமல்லாமல், இப்படத்திற்கு தயாரிப்பாளராக இருப்பதும் ஒரு மிக முக்கிய காரணம். ஆனால், நிச்சயமாக அவர் என்னைவிட ஒரு படி மேல்தான்.நான் ஒரு செருப்பை வைத்து படம் இயக்கினேன். இவர் இரண்டு ஷூக்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார். நான் ‘ஒத்த செருப்பு’ படத்தை இயக்கும்போது எவ்வளவோ கஷ்டப்பட்டேன். ஆனால், அந்தப் படம் வெளியாகி ஓடிடி தளத்திற்கு சென்றவுடன் உலகளவில் பெருமையெல்லாம் எனக்குக் கிடைத்தது.இப்போதுகூட அமீர், “நீங்கள் உங்கள் படத்தை வியாபாரம் செய்துவிட்டீர்களா..? என்று கேட்டார். யாரும் இதுவரை என் வீட்டின் பக்கம் அல்லதெருவின் பக்கம்கூட வரவில்லை” என்று சொன்னேன்.

இந்த மாற்றங்கள் எப்போது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ‘இரவின் நிழல்’ படம் ‘உள்ளே வெளியே’ படத்தை போன்றிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், எவ்வளவு காலம்தான் இந்த பொருளாதார சிக்கல்களை சமாளிப்பது என்று தெரியவில்லை.நான் முந்தைய காலத்தில் பல படங்களின் மூலம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால், எனக்கு முழுமையான நிறைவைத் தரும் படம் ‘இரவின் நிழல்’ மட்டும்தான். பாக்யராஜ் சார் படத்தைப் பார்த்தார். அவர் அளித்த பாராட்டு என்பது எவ்வளவு கோடி கொடுத்தாலும் எனக்குக் கிடைக்காது. அது போன்ற சந்தோஷத்தை சாமி உணருவார். இந்த படம் நிச்சயம் வெற்றியடையும்" என்றார்

இராமானுஜம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.