அடங்கா நினைவுகள்...!


May18


ஈரேழு ஆண்டுகளை

காலமூச்சு காற்றோடு

கரைத்துக்கொண்டாலும்

இரத்தமும் சதையுமாக

உறவுகள் சிதைந்து

சின்னாபின்னமாகிய

சிதறல்களின் இரணம்

சிரத்தினை கசக்கி பிழிந்தபடியே

காலச்சக்கரம் உருண்டு

இருண்ட நினைவுகளை

இரை மீட்கிறது!


ஒன்றா இரண்டா

ஆண்டுத்துவசத்தை

முடித்து விட்டு

கடந்து போக

நீதிக்காக நிமிர்ந்த

தலைகளை

தறுதலைகள் 

தறித்துப்போட்ட

வெறித்தனத்தை

இனமானமுள்ளவன்

எப்படி மறப்பான்!


2009

எங்களுக்கு

விடிந்திருக்கக்கூடாது

என்றுதான்

இப்போதும் மனம்

அங்கலாய்கிறது౹


தாகத்துக்கு

தண்ணீரின்றி

ஓடி வந்து

குடிசையில்

கடன் வாங்கி

குடித்தவரும்

தண்ணீர்

கொடுத்தவரும்

கூவிவந்த குண்டுகளில்

மாண்டுபோன

வலியும்

பிள்ளைக்கு பால்கொடுத்த கணங்களில்

கணைகள் வந்து

உயிர்களை பிடுங்கி

வீசிய கொடும்

துயரமும்

எப்படி

விழிப்படலங்களில்

அழிந்துபோகும்!


உளி செதுக்கிய

சிலையாய்

அழகாய் கட்டிய

நிழல் அரசின்

நினைவுகள்

எப்படி அகம்

கடந்து போகும்!


கந்தக புயலில்

சிக்குண்ட சின்னஞ்சிறிய

சிரிப்புகளின்

ஓசை ஒய்ந்து

மயானமாய்

கிடந்த காட்சிகளை

நன்றியுள்ள தமிழ்

இரத்தம் எப்படி

துடிக்காமல் 

அடங்கும்!


வரிவரியாய்

தூரிகைகளோடு

ஓவியம் தீட்டிய

ஓவியரின்

காவிய கதைகளை

மீள நினைக்காது

எப்படி

வாழ நினைக்க முடியும்!


ஆதலால்

விடியலின் கருக்களாய்

விதைக்கப்பட்ட வீரியரின்

தூய நினைவுகளை

உனக்குள்

விதைத்துக்கொள்!

முளைகள் விடும்வரை

நீரை ஊற்றிக்கொள்!

நிச்சயம்

அடங்கா நினைவுகள்

கனவுகளின்

கதவைத் திறக்கும்!!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.