நாடு திரும்பினார் விராட் கோலி; ரசிகர்கள் அதிர்ச்சி!

 


தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.

இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. 

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் வரும் வரும் டிசம்பர் 26ஆம் திகதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குடும்ப சூழ்நிலை காரணமாக தென் ஆப்பிரிக்காவிலிருந்து இன்று நாடு திரும்பியுள்ளார். 

ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஓய்வெடுத்திருந்த விராட் கோலி, டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மட்டும் இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில் அவசர காரணங்களால் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் நாடு திரும்பியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இருப்பினும் அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஜொஹன்னஸ்பர்க்கிற்கு திரும்பி விடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.