அம்மா வீடு சிறுவர் பராமரிப்பு நிலைய திறப்பு விழா!


“அம்மா வீடு” சிறுவர் பராமரிப்பு நிலைய திறப்பு விழா இன்று(27) மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பில் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான லிப்ட் நிறுவனத்தின் “நகர்ப்புறப் பெண்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரித்தல்” எனும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந் நிலையத்தினை மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. ஜஸ்டினா முரளிதரன் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

லிப்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி.ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு இவ் வேலைத்திட்டத்திற்கு நிதியை வழங்கிய மனித நேயம் நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதிகளாக சிரஞ்சீவி மற்றும் அவரது பாரியார் சாந்தி ஆகியோர் கௌரவ அதிதிகளாக வருகை தந்து நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

திறந்து வைக்கப்பட்ட இக் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் மூலமாக வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தமது குழந்தைகளைப் பாதுகாப்பாக விட்டுச்செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதேவேளை பல பெண்களுக்கு இந்நிலையத்தில் வேலை வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளதாகவும் லிப்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இவ்வாறான ஓர் நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிகவும் தேவையானது எனவும், அதனை சிறந்த முறையில் உருவாக்கியுள்ள லிப்ட் நிறுவனத்தினைப் பாராட்டுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிலையத்தில் 3 மாதக் குழந்தையிலிருந்து பராமரிக்கும் வசதி காணப்படுகின்றது.

இந்நிலையத்தின் உருவாக்கத்தில் தனித்து நின்று அத்தனை வேலைகளையும் செய்து முடித்த பிறிஸ்லி றோய் இற்கு லிப்ட் நிறுவனத்தினால் பாராட்டு பாமாலை வாசித்து கௌரவம் வழங்கப்பட்டது.

இந்நிலையத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:30 முதல் மாலை 5:30 மணிவரை பராமரிப்பு சேவைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.