ஈழத்தின் வன்னி விசுவமடுவில் இடம்பெற்ற 'இனிய நந்தவனம்' வடமாகாண சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு.
'வன்னியின் தகுதிமிக்க பதிவுகளும் சான்றுகளும் இந்தச் சிற்றிதழில் அடங்கியிருக்கின்றமை சிறப்புக்குரியது' என்று நூல் நயப்புரை நிகழ்த்திய எழுத்தாளர் வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா அவர்கள் வெளிப்படுத்தினார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற 'இனிய நந்தவனம்' சிற்றிதழின் வடமாகாண சிறப்பிதழ் வெளியீட்டு விழா நன்றே நடந்தேறியது. 11.08.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு ஈழத்தின் வன்னி விசுவமடு மத்திய சனசமூக நிலைய கேட்போர் கூடத்தில் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்விற்கு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் கம்பீரக்குரலோன் சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை ஒலாபரப்புக் கூட்டுத்தானத்தின் ஆலோசகர் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர், தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் தி.செந்தில் வேலவர், வவுனியா தமிழ் விருட்சம் தொண்டமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக விருந்தினர்களும் பங்கேற்பாளர்களும் விசுவமடு மத்திய சனசமுக நிலைய திறன் விருத்தி மாணவர்களின் இன்னிய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டனர்.
கேட்போர் கூடத்தில் ஆரம்பமான நிகழ்வுகளை அறிவிப்பாளர் சிலைவேந்தன் தொகுத்தளித்தார். சுடர் ஏற்றுதல், அகவணக்கம் என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து இளைய கவிஞர் திரியாயூரான் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமை உரையினை ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் கம்பீரக்குரலோன் சி.நாகேந்திர ராசா நிகழ்த்தினார். 'இனிய நந்தவனம் காலத்தின் பணி ஒன்றினை ஆற்றி இருக்கின்றது. ஏனெனில் வன்னி மண்ணின் காலத்து அடையாளங்கள் பல இந்தச் சிற்றிதழ் மூலம் கொண்டுவரப்பட்டிருக்கின்றன' என தலைமையுரையில் குறிப்பிட்டார்.
அறிமுக உரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். வடமாகாண சிறப்பிதழை ஒழுங்கமைப்பதில் படைப்பாளர்கள் நல்கிய ஆதரவினையும், இதனை கொண்டு வருவதில் எவ்விதமான கடினங்களும் ஏற்பட்டன என்பதையும் பதிவு செய்து, இதற்காக ஒத்துழைத்த ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்தார் அவர்.
வாழ்த்துரையினை விசுவமடு மத்தி சனசமூக நிலைய திறன் விருத்தி அலகு இணைப்பாளர் ரயூலா திருச்செல்வன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து சிறப்பிதழ் வெளியீடு இடம் பெற்றது. இனிய நந்தவனம் வடமாகாண சிறப்பிதழினை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் வெளியிட்டு வைக்க, புத்தளம் அறிவிருட்சம் துரித கல்வி சமூக மேம்பாடு நிறுவன தலைவர் ஐ.எம் சுரைஸ் முதற்பிரதியினை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து விருந்தினர்களும் பங்கேற்பாளர்களும் இதழினை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வின் கல்வி சார் அறப்பணியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் வன்னியின் பொருளாதார நெருக்கடி மிக்க முன்பள்ளி ஒன்றின் கல்விச் செயற்பாட்டிற்காக இருபத்து ஐயாயிரம் உரூபாய் நிதியினை வழங்கி வைத்தார்.
இனிய நந்தவனம் இதழின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் தி.செந்தில்வேலவர், புரவலர் ஹாசிம் உமர் ஆகியோரின் தொடரான இலக்கியப் பணியினை பாராட்டி தமிழ் விருட்சம் தொண்டமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் அவர்கள் மதிப்பளித்து நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்.
சிறப்பிதழ் பணிகளை ஒழுங்கமைத்த யோ.புரட்சி, வன்னி மகள் எஸ்.கே.சஞ்சிகா, ரயயூலா திருச்செல்வன், சி.நாகேந்திரராசா, திரியாயூரான், சிலைவேந்தன், சந்திரகுமார் கண்ணன், யாழ் பாவாணன் ஆகியோருக்கு இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் நினைவுச் சின்னங்கள் வழங்கி மதிப்பளித்தார்.
வன்னியன் போர்க்கால மருத்துவர் வட்டக்கச்சி ஜெயராஜா அவர்களுக்கும், சிறுவர் நூல்களை அதிகம் ஆக்கிய புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி ஆசிரியர் முல்லை றிசானா அவர்களுக்கும் நிகழ்வில் மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.
நூல் நயப்புரையினை வன்னிமகள் எஸ்.கே.ஞ்சிகா நிகழ்த்தினார். சிறப்புரையினை தினகரன் வார மஞ்சரியின் ஆசிரியர் தி.செந்தில் வேலவர் நிகழ்த்தினார். இனிய நந்தவனம் சிற்றிதழ் இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் தனது பணியை கொண்டு செல்வது தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமான இலக்கியத் தொடர்பின் முக்கிய அங்கம் எனக் குறிப்பிட்டார்.
ஏற்புரையினை இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் நிகழ்த்தினார். சிற்றிதழ் ஒன்றினை கொண்டு வருவதில் எவ்வளவு இடர்பாடுகள் இருந்த பொழுதும் 25 ஆண்டுகள் கடந்தும் நந்தவனம் பயணிப்பது வாசகர்களின் ஒத்துழைப்பு என குறிப்பிட்டார்.
நன்றியுரையினை யாழ் பாவாணன் வெளியீட்டக இயக்குனரும் இனிய நந்தவனம் இலங்கை இணைப்பாளருமான யாழ்பாவாணன் நிகழ்த்தினார்.
படைப்பாளர்கள், இலக்கிய விரும்பிகள் என தகுதிமிக்க நிறைந்த அவையோடு இனிய நந்தவனம் வடமாகாண சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு நடந்தேறியது ஓர் இலக்கிய மகிழ்வே.
கருத்துகள் இல்லை