ஆன்மாவில் ஏற்றப்பட்ட சுடர்!


இந்தியா, இந்திரா, நேரு, காந்தி, காந்தீயம் போன்ற சொற்பதங்கள் ஒருகாலத்தில் எமது மக்கள் மத்தியில் காதில் தேனூறும், நம்பிக்கை தரும் மந்திரச் சொற்காக இருந்தன. அதற்கமைய ஈழவிடுதலைக்காக போராட வெளிக்கிட்ட பல இயக்கங்கள் இந்தியாவிடமும் இந்திராவிடவும் நிபந்தனையின்றி தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் இந்தியாவினதும் இந்திராவினதும் செல்லப் பிள்ளைகளும் ஆகியிருந்தனர்.


மறுபுறம் ஒரு சில இயக்கங்கள் "இந்தியாவும் இந்திராவும் நண்பர்கள் அல்ல எங்கள் எதிரிகள்" என்பதை எமது மக்களுக்கு புரிய வைக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்தனர். இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க தந்திரங்களையும்  அதன் மிருகத்தனங்களையும் பற்றி அம்பலப்படுத்திக் கொண்டிருந்தனர். "வங்கம் தந்த பாடம்" பற்றியும் பஞ்சாப் மக்கள் மீதான இந்திராவின் இரும்புக் கரம் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதினர்.


ஆனால் எமது மக்களின் இந்தியாவுடனான நேசவுணர்வையும் நம்பிக்கையையும் உடைப்பது கல்லில் நார் உரிப்பது போன்றது. ஆயிரமாண்டுகளாக புராணங்கள் வாயிலாகவும் மூட நம்பிக்கைகள் ஊடாகவும் பழைய தமிழ் தலைமைகளின் பொய்யுரைகளாலும் விதைக்கப்பட்ட நம்பிக்கை அது.


விளைவு:

இந்திய அமைதிப் படை எனும் "அக்கிரமக்கார ஆக்கிரமிப்புப் படையை" எமது மக்கள் ஆராத்தியெடுத்து வரவேற்றனர்.


எம்மை என்றென்றைக்குமான இந்தியாவின்  அடிமைகமாக்குவதற்கான தந்திரத்தை நாங்களே வரவேற்றோம்.


இந்திய அமைதிப்படை எம்மை காக்க வரவில்லை. ஆக்கிரமித்து அடிமை கொள்ளவே வந்துள்ளது என்பதை எமது மக்கள் உணராதவரை எந்த "முற்போக்கு", "புரட்சிகர", "தேசபக்த" இயக்கத்தாலும் எமது மக்களைக் காப்பாற்ற முடியாது.


ஈழவிடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்பது பற்றி எமது அரசியல் ஆய்வாளர்கள், முற்போக்கு சக்திகள், மார்க்சிஸ்ட்டுகள், மாவோவிஸ்ட்டுகள், ட்ரஸ்கிஸ்ட்டுகள் தத்தமது தீர்க்கதரிசனங்களையும் தீர்வுகளையும் அவிட்டுவிட முடியாமற் திணறிக் கொண்டிருந்த நிலையில் எடுக்கப்பட்ட, மிகத் தெளிவான, தீர்க்கமான, மதிநுட்பமான, வினைத்திறன்மிக்க முடிவுதான்,


"ஓபரேசன் திலீபம்"


இந்த இடத்தில்தான் "மக்கள் போராட்டம்" மீதான விடுதலைப் புலிகளின் நம்பிக்கையையும், தெளிவையும், வினைத்திறன்மிக்க அணுகுமுறையையும் கண்டு நான் வியந்தேன்.


ஆயிரம் சொற்பொழிவுகளாலும், மேடைப் பேச்சுகளாலும், அரசியல் கட்டுரைகளாலும் முடியாத அரசியல் விழிப்புணர்வையும், மக்கள் எழுச்சியையும் சுடர்விட்டெரியச் செய்தது "திலீபம்" எனும் தியாகம். 


இந்தச் சுடர் இன்னமும், இன்றும் அதே ஒளியுடன்,  அதே உணர்வுடன்...


ஆம்,


தமது காலத்தின் பின்னும் எமது மக்களின் விடுதலை உணர்வு சுடர்விட்டெரிய வேண்டும் என்பதற்காவே  தம் இன்னுயிர்களை விதையாக்கினார்கள் மாவீரர்கள்.


எமது மக்களின் மூளையில் அல்ல,

ஆன்மாவில் ஏற்றப்பட்ட சுடர் அது!


இதுவே முப்பது வருட எமது போராட்டத்தின் சாதனையும் வெற்றியுமாகும்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.