ஈரத்தீ (கோபிகை ) -- பாகம் 50!!
மீதி இருந்த பொழுதுகள் கனவாகவே கடந்தது எல்லோருக்கும். தேவமித்திரனின் வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்தோம். மேகவர்ணன் அண்ணாவும் சீலன் அண்ணாவும் ஒவ்வொருவருக்காக அழைப்பு எடுத்து விசயத்தைப் சொல்லிக்கொண்டிருந்தனர்.
எனக்கு ஏதோ எல்லாமே இருண்டு போனது போல இருந்தது. மாமாதான் அதிகமாக யோசனையோடு அமர்ந்திருந்தார்.
நான் உடனேயே போகத்தான் நினைத்தேன். தேவமித்திரன் தான் யாரும் வரவேண்டாம் என்றும் தான் இரவுக்குள் வந்துவிடுவேன் என்றும் சொல்லி விட்டுச் சென்றிருந்தார்.
நேரமுள் நகராமல் நிற்பது போலவும் உலக இயக்கமே உறைந்துவிட்டது போலவும் தோன்றியது எனக்கு. தலை பாரமாகக் கனத்தது.
தேவமித்திரன் சில மாதங்களாக ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக இருந்தார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் என்ன செய்தார் என்பதுதான் தெரியவில்லை.
ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. போதைப்பொருள் பரவலுக்கு எதிராக அவர் பாரிய செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். பாடசாலைகளில் விழிப்புணர்வு, போதைக்கு எதிரான பிரச்சாரம் என வீதி வீதியாக பதாதைகள் காட்சிப்படுத்தியும் ஒலிப்பதிவு பிரச்சாரங்கள் செய்தும் அவரும் அவரோடு இணைந்த சிலருமாக முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் பாதிப்படைந்த யாரோ தான் இந்த நாசகார வேலையில் துணை நிற்கிறார்கள்.
ஒரு இனத்தின் வீழ்ச்சி என்பது அந்த இனத்தின் வரலாற்றை மடைமாற்றி ஆவணங்களை அழித்து, கட்சிகளுக்கும் பிளவுகளை உருவாக்கி, ,இளம் தலைமுறையினரின் சிந்தனைகளைப் சிதைப்பதன் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அந்தக் கோரச் செயலுக்கு எதிராகவே தேவமித்திரன் கிளர்ந்தெழுந்திருந்தார். அதில் தவறென்ன இருக்கிறது.
எங்களுடைய இனத்தின் மீது நாங்கள் அக்கறை அற்றவர்களாக இருக்கலாமா...
எத்தனை ஆயிரம் மாவீர மணிகள் இந்த இனத்தின் விடியலுக்காக கனவு சுமந்து விதையாகிப் போனார்கள்..
கந்தகம் சுமந்து கனலாகி வெடித்தார்கள்....
அவர்களின் நேசிப்பிற்கும் உயிர்க்கொடைக்கும் காரணமான இந்த இனத்தின் கனவுகளை ஏதோ ஒரு வகையில் சுமந்து பயணப்பட வேண்டியது ஏங்கள் அனைவருக்குமான தார்மீக கடமை தானே.
அதற்காகவா இந்தக் கைது?
அதற்காகவா இந்த விசாரணை?
எங்களுக்கென்று இன் உணர்வு இருக்கக்கூடாதா....
எங்களுக்கென்று இனப்பற்று இருக்கக்கூடாதா...
தமிழினம்...ஆதி மொழியைக் கொண்ட ஒரு பேரினம்.
மொழி என்பது மூச்சுப் போன்றது.
எம்முடைய கலாசார பண்பாட்டு அடையாளங்கள் எமக்கே எமக்கானவை. அவற்றின் புனிதத்தைப் பேணுவது எங்கள் கடமை தானே.
அதை இனத்துவேசவாதிகள் சீரழித்து சின்னாபின்னமாக்கினால் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வாழுவது முறையானதா...
என் தேவமித்திரன் ஒரு கனவுக்காகப் பயணப்பட்டவர். அதில் எந்த தவறும் கிடையாது...
எனக்கு நானே சொல்லிக் கொண்டிருக்க அருகில் வந்த பாமதி அக்கா
"அம்மா சமர்...சாப்பிடவும் இல்லை... கொஞ்சம் சுடுதண்ணி குடியினம்மா...." என்றா.
அப்போது தான் திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்தேன். பொழுது மெல்ல இருண்டிருந்தது.
"இல்லை அக்கா...அவர் வரட்டும்..." என்றுவிட்டு திரும்பவும் அந்தக்கதிரையில் சுருண்டு கொண்டேன்.
அகரனையும் வண்ணமதியையும் இனியனையும் பார்கவி தங்கள் வீட்டிற்கு கூட்டிச் செல்வது தெரிந்தது.
சற்றே திரும்பி முன் விறாந்தையில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
நேரம் மாலை ஆறு மணியைக் கடந்திருந்தது.
இன்னும் தேவமித்திரன் வரவில்லை.
என் உள்ளுணர்வு ஏதோ ஒரு அபாயத்தை உணர்த்தியது.
இயற்கையிடம் இறைஞ்சி வேண்டிக்கொண்டேன்.
அவர் மீண்டு வரவேணும்.
மீண்டும் வரவேணும்...
நல்லவர்களையும் அக்கறை கொண்டவர்களையும் இப்படி கலங்கவைப்பது என்ன நியாயம் என்று தோன்றியது.
தமிழினத்தின் இருப்பை கேள்விக்குறி ஆக்குவது தானே சிங்கள அரசாங்கத்தின் முனைப்பான செயலாக இருக்கிறது.
இலங்கை என்கிற நாடு இந்த அளவுக்கு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதற்கு மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் சிங்கள அரசின் இனவாதப்போக்குத்தானே காரணம்.
பொருளாதாரச் சரிவும் அறிவியல் துறை வீழ்ச்சியும் எதனால் ஏற்பட்டிருக்கிறது.
எரிபொருளுக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏன் வந்தது...
சிங்கள ஏகாதிபத்திய அரசுகள் கக்கிய இனவாதச் சிந்தனைகளே இந்த நாட்டை அதன் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது என்பது அவர்களுக்கு புரிந்தாலும் இன்னும் இன்னும் தமிழர்களை கீழே விழுந்ததில் பார்க்க வேண்டும் என்பதே முழு எண்ணமாக இருக்கிறது...
அரசுகள் மாறுகின்றனவே தவிர அவர்களின் இனவாதம் போக்கு மாறுவதில்லை....
எனக்குள் நானே நினைத்துக் கொண்டவளாக மெல்ல எழுந்து அமர்ந்தேன்.
தொடரும்...பா
கருத்துகள் இல்லை