ஈரத்தீ (கோபிகை) - பாகம் 51!!
நாங்கள் எல்லோருமே தேவமித்திரன் வீட்டில் மாமாவுக்குத் துணையாக இருந்தோம்.
நேரம் பத்து மணியைக் கடந்து விட்டது. இதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருப்பது சரியில்லை...
எழுத்து மேகவர்ணன் அண்ணாவின் அருகில் சென்று நின்றபடி,
"அண்ணா... நான் போய் பாத்திட்டு வரப்போறன் " என்றேன்.
"எங்க...? " என்றார்.
"பொலிஸ்ரேசனுக்குத்தான்" என்றேன்.
"சமர்...இப்ப அங்க போய் என்ன செய்யப்போறாய்..., கொஞ்சம் பொறம்மா...அவன் இப்ப இஞ்ச இல்லை, யாழ்ப்பாணம் கொண்டு போட்டாங்கள் " என்றார்.
"என்ன சொல்லுறியள் அண்ணா...ஆர் சொன்னது உங்களுக்கு
..கடவுளே...நானும் அவரோட கூடப்போயிருக்க வேணும்...பிழை விட்டிட்டன் அண்ணா...அவர் வரவேண்டாம் எண்டால் நான் நிக்கிறதே... எனக்கு பயமா கிடக்கு அண்ணா..."
"சமர்...அழாதையம்மா... " மாமாதான் அவசரமாகச் சொன்னார்.
நான் சின்னவளாக இருந்த காலத்தில் இருந்து மாமாவுக்கு நான் அழுதால் தாங்க முடியாது. உடனே, என்னை ஆறுதல் படுத்திவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார். கண்களைத் துடைத்தபடி தலையை ஆட்டினேன்.
என் அருகில் வந்த பார்கவி, என் கைகள் இரண்டையும் கொத்தாகப் பற்றிய படி
" சமர்.... கொஞ்சம் அமைதியாக இருங்கோ...உங்கட நிலைமை எங்களுக்கு விளங்குது,
இதே மாதிரி முதலும் ஒருதரம் நடந்தது. தேவா அண்ணா எங்கட மக்களின்ரை சுதந்திரத்துக்காகதந்தான் முழுநேரமும் யோசிக்கிறவர். இப்பிடி இனத்துக்காக வாழும் ஆக்கள் மிக குறைவு. ஆனால் தேவா அண்ணா இதே சிந்தனையோடு ஏ வாழுறவர்.
அவரால தான், தன்ர குடும்பம் என்று இருக்க முடியாது. அப்படியான ஆக்களைக் கண்டால் உவங்களுக்கு சரியான பயம். அதுதான் இந்த வேலை செயாயிறது...
இப்பிடி விசாரணை என்று அடிக்கடி அழைத்துச் சென்றால் பயந்து போய் பேசாமல் வீட்டு வேவையோட இருப்பார்கள் எண்டு நினைக்கிறாங்கள். எங்கட தேவா அண்ணா....சாதாரணமான ஆளே...
வன்னிக்காடுகளில் எங்கள் வீரத்தளபதிகளால் உருவாக்கப்பட்ட வேங்கை அவர். தமிழினத்தின்ரை விடுதலையைத் தங்களுடைய மூச்சாகச் சுவாசித்த உன்னதமானவர்களில் அவரும் ஒருத்தர். இந்த சலசலப்புக்கெல்லாம் அவர் அஞ்சமாட்டார். விஞ்ஞானபீட பட்டதாரியான அவர் என்னத்துக்கு சட்டம் படிச்ஞவர்... அவருக்கு எல்லா ஓட்டைகளும் தெரியும். நீங்கள் யோசிக்காதேங்கோ... அவர் மட்டுமில்லை, இன்னும் எத்தனையோபேர் எங்கட இளையோரை திட்டம் போட்டுச் சீரழிக்கிற ஈனத்தனமான செயலுக்கு எதிராக ஏதோ ஒரு வகையில் போராடிக்கொண்டு தான் இருக்கினம்...
இன்றைய எங்கட இளையோர் எண்டுறது நாளைய எங்கட தலைவர்கள்... எங்கள் இனத்தைக் கட்டிக் காக்கப்போகும் காவலர்கள்.. அவர்களைப் போதைக்கு அடிமையாக்கி சிந்தனைத்திறனற்றவர்களாக மாற்றி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறது தான் இந்த அரசாங்கங்களின்ரை நிலைப்பாடு. அதுக்கு எதிராக நாங்கள் போராடத்தான் வேணும், அண்ணா மட்டுமில்லை... நானும் நீங்களும் ஏன் கால ஓட்டத்தில் இனியனும் அகரனும் வண்ணமதியும் கூட இதைச் செய்யத்தான் வேணும். தமிழருக்கு சுதந்திரமான சுபீட்சமான வாழ்க்கை கிடைக்கிற வரைக்கும் எங்கட நிலைமை இதுதான்.
வடிவத்தை மாற்றலாமே தவிர சிந்தனை மாறக்கூடாது...."
தலையை ஆட்டியபடியே பார்கவியை ஆச்சரியமாகப் பார்த்தேன்.
இதுவரை அதிகம் கதைத்து நான் பார்த்திராத பார்கவிக்குள் எவ்வளவு உணர்வுகள் கொப்பளிக்கிறது...
அழுத்தமான பெண்ணாக நான் கண்ட பார்கவி, ஆழமான சிந்தனை கொண்ட ஒரு பொது நல வாதியாக எனக்கு தெரிந்தார்.
முப்படைத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவின் மீது தற்கொலைக் குண்டுதாரியாக வயிற்றில் சிசுவோடு வெடித்துச் சிதறிய அந்தப் பெண்ணின் மனத்துணிவையும் தைரியமான போக்கையும் பற்றி நான் அடிக்கடி நினைப்பதுண்டு.
பெண்களுக்குத்தான் எவ்வளவு சக்தி இருக்கிறது, யார சொன்னது பெண்கள் பலவீனமானவர்கள் என்று....என ஓடியது. என்னுடைய சிந்தனை.
என் எண்ணங்களைப் புரிந்து கொண்ட சீலன் அண்ணா,
"சமர்...நீங்கள் தைரியமாக இருக்கவேணும்... நாளைக்கு தேவமிந்திரன் வந்திடுவார்... ஒண்டும் யோசிக்காதேங்கோ" என்றார்.
ஆனால் அவருக்குள் ஆழமான யோசனை ஒன்று ஊடுருவிக்கொண்டு இருப்பதை என்னால் உணர முடிந்தது.
எல்லோருக்கும் பொதுவாகத் தலையை ஆட்டிவிட்டு மாமாவிடம் சென்றேன்.
" மாமா... ஏதாவது சாப்பிடுங்கோ...கன நேரமாச்சு நீங்கள் சாப்பிட்டு...." என்றேன்.
"எனக்கு ஒண்டும் வேண்டாம் அம்மா...நீ யோசிக்காதை, அவன் வந்நிடுவான்" என்றார்.
மாமா...ஏதாவது மெல்லிசா
சாப்பிடுங்கோ...என்றபடி நிமிரவும் கையில் தட்டுடன் பாமதி அக்கா வருவது தெரிந்தது.
"அப்பா... சமர் சொல்லுறதைக் கேளுங்கோ, ரெண்டு இடியப்பம் கொண்டு வந்தனான்...சாப்பிடுங்கோ...பிறகு தேவாவுக்கு நாங்கள் பதில் சொல்ல ஏலாது...சரியே... அவனுக்கு சரியான கோபம் வரும்...* என்றா.
எதுவும் பேசாமல் அந்த இடியப்பத்தை வாங்கி அருகில் வைத்தார். நான் உள்ளே சென்று செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்.
மெல்ல எழுந்தவர் அருகில் இருந்த பூச்சாடி ஒன்றுக்குள் கையைக்கழுவி விட்டு எதுவும் பேசாமலே சாப்பித் தொடங்கினார்.
விடியாத இரவாகவே அன்றைய இரவு கடந்தது.
தொடரும்....
கருத்துகள் இல்லை