அல்லைப்பிட்டியில் தீயில் கருகிய நிலையில் வயோதிபர் சடலமாக மீட்பு!📸


யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையில் தீயில் கருகிய நிலையில் 84 வயதுடைய வயோதிபர் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 3ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த மணியாஸ் சேவியர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வயோதிபர் வாழ்ந்த வீட்டில் இருந்து புகை வெளிவருவதை வீதியால் சென்ற அவரது உறவினர் ஒருவர் அவதானித்துள்ளார். உடனடியாக வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மணியாஸ் சேவியர் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்திருப்பதைக் கண்டுள்ளார். உடனடியாக ஊரவர்களை அழைத்து மீட்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை.


சம்பவம் குறித்து கிராமசேவகர் மற்றும் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீவகப்பகுதி மரணவிசாரணை அதிகாரி என். தியாகராசா, சடலத்தை மீட்டு, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.


கடந்த சில மாதங்களாக மணியாஸ் சேவியர் நடக்க முடியாத நிலையில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட அவர் பாவித்த பீடியின் மூலம் அவர் உறங்கும் மெத்தையில் ஏற்பட்ட தீ விபத்தே இந்த மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.