ரணிலை விளகமறியலுக்கு அனுப்பும் வரையான சம்பவங்கள் ஒரே பார்வையில்!


பிணையில் வெளிவர முடியாத சரத்துக்களில் வழக்குப் பதிவு செய்து ரணிலை விளகமறியலுக்கு அனுப்பும் வரையான சம்பவங்கள் ஒரே பார்வையில்


முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில்..


வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.


ரணில் மீது 386 மற்றும் 388 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பொது சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல்,பிணையில் வெளிவர முடியாத குற்றங்கள் ஆகியவை அடங்கும்.!


இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.


முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.


ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.


இப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.


இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.


இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.


அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.


அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி, அவர் இன்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.


சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.


பின்னர் அவர் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.


முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விளக்கமளித்தார்.வி.எஸ். கருணாரத்ன என்ற நபர் 17.03.2025 அன்று ஜனாதிபதியிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் 23.05.2025 அன்று ஜனாதிபதியின் செயலாளரால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 13.09.2023 முதல் 20.09.2023 வரை கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பின்னர், 22 மற்றும் 23.09.2023 ஆகிய திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகக் கூறி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


அதன்படி, தொடர்புடைய சம்பவம் தொடர்பாக 33 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், நாட்டின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.


நீண்ட விசாரணைகளின் போது அரசாங்க தரப்பு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக ரணிலுக்கான பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.