மஹிந்தவை விசாரணை செய்யுங்கள்!

 


தற்போது இராணுவ வீரர்கள் தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கும் ராஜபக்ஷக்கள் 2005இல் தேர்தல் வெற்றிக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத கொள்வனவுக்காக 2 மில்லியன் டொலர்களை வழங்கினர். 2009 இறுதி யுத்தத்தின்போது வேலுப்பிள்ளை பிரபாகரனை தப்பிக்கச் செய்வதற்காக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு பணிப்புரை விடுத்து 4000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்படுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ வழியேற்படுத்திக் கொடுத்து தேசத்துரோகம் இழைத்துள்ளார். எனவே அவருக்கெதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மாத்தறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

என்னை சிறையில் அடைப்பதற்கு மஹிந்த நடவடிக்கை எடுத்தமை தவறு என்று தற்போது நாமல் கூறுகிறார். இப்போது இராணுவ வீரர்கள் மீது இவர்களுக்கு புதுமையான இரக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அன்று அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த எனது மகள்களை நாட்டுக்கு அழைத்து விமான நிலையத்தில் வைத்து இரவிரவாக விசாரணைக்கு உட்படுத்தினர். யுத்த களத்தில் நேருக்கு நேர் மோதினாலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட எனது குடும்பத்தில் கைவைக்கவில்லை.

அதேபோன்று எந்தவொரு இராணுவ வீரரதும் குடும்பத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் பிரபாகரன் முயற்சிக்கவில்லை. ஆனால் ராஜபக்ஷக்கள் அவ்வாறானவர்கள் அல்ல. அவர்கள் மிகவும் இழிவானவர்கள். நான் கோபத்தில் பேசவில்லை. ஆனால் இதுவே யதார்த்தமாகும்.

என்னுடன் பணியாற்றிய 35 உயர் இராணுவ அதிகாரிகள் ஓய்வூதியமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டாமென ராஜபக்ஷக்கள் நிறுவனங்களை அச்சுறுத்தினர். 2009 ஜனவரி – பெப்ரவரிக்கு இடைப்பட்ட காலத்தில் போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

பிரபாகரனை தப்ப வைப்பதற்காகவே அவரால் அந்த பணிப்புரை விடுக்கப்பட்டது. அன்று அவரிடமிருந்து அந்த உத்தரவு வந்திருக்காவிட்டால் மார்ச்சில் நாம் யுத்தத்தை நிறைவு செய்திருப்போம். இதனால் சுமார் 4000க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் தமது உயிரைத் தியாகம் செய்ய வேண்டியேற்பட்டது.

எதற்காக மஹிந்த போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு உத்தரவிட்டார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பிரபாகரன் உள்ளிட்டவர்கள் தப்பிச் செல்ல வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர, அவருக்கு வேறு எந்த நோக்கமும் இருக்கவில்லை.

மஹிந்தவுக்கு இவ்வாறான தேச துரோகங்கள் பழக்கமாகும். 2005 தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் ரணிலுக்கு வாக்களிப்பார்கள் என்ற அச்சத்தில், எமில்காந்தன் போன்றோரிடம் ராஜபக்ஷ அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பிரபாகரன் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பதை தடுத்தால் அவருக்கு தேவையான உதவி ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் அதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாக 2010 தேர்தலின்போது டிரான் அலஸ் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய மலேசியாவிலிருந்து படகுகளை கொள்வனவு செய்வதற்கு 2 மில்லியன் டொலர்கள் கோரப்பட்டு அதனை ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளுக்கு வழங்கியது. அந்த படகுகள் மூலமாகவே புலிகள் கடற்படையினரை தாக்கினர்.

2005இல் தேர்தல் வெற்றிக்காக புலிகளுக்கு 2 மில்லியன் டொலர்கள் வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ தேசத்துரோகியல்லவா? நாம் பயங்கரவாதிகளுடன் போர் புரிந்துகொண்டிருக்க இவர், அவர்களின் ஆயுத கொள்வனவுக்கு நிதி உதவியளிக்கின்றார்.


உலகில் வேறு எந்த நாட்டின் தலைவரும் இவ்வாறு செயற்பட்டிருந்தால் நிச்சயம் மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும். மஹிந்தவை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு துணிவிருந்தால் அது தொடர்பில் மீள விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.


2005இல் இவ்வாறு 2 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதை பஷில் ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார். அதனையே டிரான் அலஸ் 2010இல் நாட்டுக்கு வெளிப்படுத்தினார். அன்று நான் இராணுவத்தளபதியாக பணியாற்றியதால் பஷிலுக்கு எதிராக யுத்தத்தை பிரகடனப்படுத்த முடியாது.


நான் நிலத்தைப் பார்த்துக்கொண்டு அதனை கேட்டுக்கொண்டிருந்தேன். எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு மஹிந்த மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நிறுவி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.