வடக்கில் நூலக சேவைகள் பணியகம் நிறுவல் குறித்து கலந்துரையாடல்!
வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடல் இன்று (14.11.2025) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவினர் ஆளுநரை சந்தித்து, வடக்கு மாகாணத்திலும் மாகாண மட்டத்திலான நூலக சேவைகள் பணியகம் ஒன்றை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே சில மாகாணங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருவதுடன், அதன் கீழ் மாவட்ட மட்டம் மற்றும் பிரதேச செயலக மட்டத்திலும் நூலக சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் விளக்கினர். மேலும், மாகாண பொதுநூலகமும் மாவட்ட பொதுநூலகங்களும் இந்த கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன எனவும் கூறினர்.
இந்த முன்மொழிவை ஆளுநர் வரவேற்று, வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் அமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார். இலத்திரனியல் நூலக சேவைகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் அதனுடன் தொடர்பான பயிற்சிகள் வழங்கும் பணியில் தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபை மேற்கொண்டு வரும் செயல்பாடுகளுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்திலிருந்து புத்தக வெளியீட்டுக்கான உதவித் திட்டங்களுக்கு கிடைக்கும் விண்ணப்பங்கள் மிகவும் குறைவாக உள்ளதாக சபை தெரிவித்தது. இதற்கு பதிலளித்த ஆளுநர், உள்ளூராட்சி மன்றங்கள் மூலமாக இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் ஆளுநரின் உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை