அரச கல்லூரியில் நடந்த கொடூரம்!!

 


இந்தியாவில் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், 22 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கல்லூரி உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் உட்பட மூன்று பேரை சைதாப்பேட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகர் என்பவர், நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீனில் பணியாற்றி வந்த நிலையில், அதே கேன்டீனில் பணியாற்றிய அரியலூரைச் சேர்ந்த 22 வயது பெண்ணை கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது

இதனைத் தொடர்ந்து, கேன்டீனில் பணியாற்றும் மற்றொரு ஊழியரான கார்த்திகேயன் மற்றும் கேன்டீன் நடத்தும் முத்துச்செல்வம் ஆகியோரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி காவலாளியிடம் அழுதபடி தெரிவித்ததை அடுத்து, உடனடியாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குணசேகர், கார்த்திகேயன் மற்றும் முத்துச்செல்வம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி மற்றும் அவரது 2 வயது குழந்தை கொல்லப்பட்டு, அவரது மனைவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்காத நிலையில், நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், ஒரு அரசியல் தலைவர், “கல்வி நிலையங்களில்கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.