ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான அறிவிப்பு!!


 அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமான முறையில் நட்டஈடு பெற்றுக்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகைகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இன்று கையளிக்கப்பட்டன.

குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் மூவரையும் தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், பிரதிவாதிகள் மூவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்த நீதிபதி, அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் கட்டளையிட்டார்.

மேலும், பிரதிவாதிகளின் கைரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்வுக்காக அழைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்தப் பணப் பேர ஊழல் வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவுடன் சேபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோரே ஏனைய பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் போராட்டங்களின் போது, இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல - கிரிஇப்பன்வெவ பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துகள் சேதமடைந்தன.

மேற்படி அரச சொத்துக்களுக்கான நட்டஈடு கோருவதை உரிய அதிகாரிகள் நிராகரித்திருந்தனர். எனினும், அதற்கு மாறாக நட்டஈடு வழங்கும் அலுவலகத்தில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்குத் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்த சஷீந்திர ராஜபக்ஷ, 88 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நட்டஈட்டைப் பெற்றுக்கொண்டுள்ளார்

அரச சொத்துக்களுக்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தி, "ஊழல்" எனும் குற்றத்தைப் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இவர்களுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.