யாழ்ப்பாணத்தில் 11வது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு!!




 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழி அமைப்பும் இணைந்து நடத்திய தனிநாயகம் நினைவரங்க நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நேற்று(09.08.2026) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு தொடக்க வுரை ஆற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டு மலேசியாவில் கோலாலம்பூரிலும், நான்காவது மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றன.

யாழ் குடா நாடு விழா கோலம் பூண்டு, பேரெழுச்சியுடன் மாநாடு இடம்பெற்ற வேளையிலேயே, மாநாட்டின் இறுதி நாளன்று நடந்த தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட துயரச் சம்பவமும் வரலாற்றில் பதிவாகியிருந்தது.

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் சிறப்பாக நடந்தேறியிருந்தது. இந்நிலையிலேயே 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் 2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.